திங்கள், ஆகஸ்ட் 27, 2012

வலையில் சிக்கியவர்கள்


( 26 08 2012 ல் சென்னையில் நிகழ்ந்த தமிழ் வலைப்பதிவாளர் விழா )


வில்லவன்கோதை
இணையத்தில் சிதறிக்கிடந்த கைக்கெட்டிய நெல்லிக்காய்களை திரட்டி முதன் முறையாக மூட்டையாக கட்டியிருக்கிறார்கள் கவிஞரும் வலைப்பதிவாளருமான மதுமதியும் அவரைச் சார்ந்த சில சென்னை வலைப்பதிவாளர்களும்.
பதிவர்கள் ( BLOGGERS ) என்றாலே எதற்கும் கட்டுப்படுகிற இனமல்ல என்பதை எல்லாரும் அறிந்ததுதான். அப்படியிருந்தும் பதிவுலக தாதாக்களைகூட வெஜிட்டேரியன் உணவு பரிமாறி சேர்த்தணைத்து மூட்டையை இருக்கி கட்டிய பெருமை நிர்வாகிகளைச்சாரும்.  அன்று அதிகாலையிலேயே தமிழகத்தின் பல்வேறு முடுக்குகளிலிருந்தும் மும்பை பெங்களூரு பெரு நகரங்களிலிருந்தும் பெருவாரியான முகமறியாத பதிவர்கள் சென்னைப்பதிவர்களுடன் சங்கமித்திருந்தார்கள். சிங்கப்பூர் மலேசியா துபய் போன்ற தூரதேசங்களிலிருந்தம்கூட தங்கள் விடுமுறைகளை திருத்தியமைத்து விழாஅரங்கில் கூடியிருந்தார்கள். பதினைந்திலிருந்து எழுபது வயது வரை வயது வித்தியாசமின்றி ஆண்களும் பெண்களும் முஸ்லிம் சகோதரிகள் உட்பட  விழா இறுதிவரை இருந்து சென்றது வியக்கத்தக்கது. ஏரத்தாழ கலந்து கொண்ட இருநூறு பேர்களில்  இருபத்தைந்து விழுக்காடு பெண்கள் என்பது இன்னொரு நல்ல விஷயம்.  
கடந்த ஆகஸ்ட் 26 காலை ஒன்பது மணியளவில் மேற்குமாம்பலம் புண்ணியகோடி அரங்கில் துவங்கிய தமிழ்ப்பதிவர்கள் விழா நாள்முழுதும் பிசிறின்றி தொடர்ந்து மாலை ஆறுமணிக்கே முடிவுக்கு வந்தது. பதிவர்களின் சுவாரஸ்யமான சுய அறிமுகம் மூத்த பதிவர்களை போற்றுதல் இருபதுக்கு மேற்பட்ட கவிஞர்களின் அரங்கம் பெண்பதிவரின் நூல் வெளியீடு என்று மிகுந்த கரவொலியோடு சுவாரஸ்யமாக நீண்ட விழா க்ரைம் கதைகளின் ஊற்றாக விளங்கிய  பட்டுக்கோட்டை பிரபாகரின் பயனுள்ள போதனைகளுடன் மாலை நிறைவுற்றது. காலையிலிருந்து மாலை வரை நீண்ட நிகழ்ச்சிகளை இந்த பூமிப்பந்தின் பல்வேறு புள்ளிகளிலிருந்து கண்டுகளிக்க இணையத்தில் நேரலை வசதியும் செய்யப்பட்டிருந்தது.
செவிக்கு முழுமையாக உணவிருந்தபோதே அவ்வப்போது வயிற்றுக்கும் குறைவின்றி ஈயப்பட்டது. புத்தகங்களின் தள்ளுபடி விற்பனையும் குறுதகடுகளின் அணிவகுப்பும்  அரங்கை அலங்கரித்தது.
மூத்த பதிவர்களின் பங்களிப்பை போற்றி தன் உரையைத்துவக்கினார் பட்டுக்கோட்டை பிரபாகர்.
மனைவிக்கு காதுகொடுத்து கேட்க அவகாசமில்லை. அலைந்து திரிந்து வரும் மகனுக்கோ சலிப்பான தருணங்கள் மருமகளுக்கு கைபேசி உரையாடலுக்கிடையே  உபயோகமற்ற விஷயங்கள்.குழந்தைகளுக்கு கம்யூட்டர் கேம்ஜ் என்ற பெருந்திரைகள் என்ற இன்றைய சூழலில்
யாரும் என்னோடு பேசவேண்டாம் .என்னோடு பேச லட்சம் பேர் இணையத்தில் இருக்கிறார்கள் என்பது இன்றைய முதியவர்களுக்கு இணையம் தந்தவரப்பிரசாதம் என்றார் பிரபாகர்.
வலைபூக்கள் என்பது ஒருகாலத்திய கையெழுத்துப்பத்திரிக்கைகளின் நீட்சியே என்று துவங்கிய பிரபாகர் வலைதளங்களகளில் படைப்புகளை விமர்சனம் செய்யுங்கள்.படைப்பாளிகளை விட்டுவிடுங்கள் என்றார். கலை ரசனை இருந்தாலொழிய திரைப்படங்களை விமர்சிக்காதீர்கள்.அது நேர்மையன்று என்று பேசி  விழாவை நிறைவு செய்தார். பதிவர்கள் சந்திப்பு கூடிக்கரையும் காகங்களல்ல. கொட்டித்தீர்க்கும் மழையாக இருக்கட்டும் என்ற பதிவர் சுரேகாவின் இணைப்புரையோடு  பதிவர் சந்திப்பு கலைந்தது. 
ஒரு கட்டுப்பாடற்ற இனம் கட்டுப்பாடுகள் ஏற்படும்முன் தன்னைத்தானே . கட்டுப்படுத்திக்கொள்ளுமா.  அப்போது மட்டுமே வலைப்பூக்கள் தவிற்க இயலாத சக்தியாக உருவெடுக்கக்கூடும்.
_____________________________________________________________

இடுகை 0094

2 கருத்துகள்:

  1. தமிழ்வெளியல் சுற்றிய போது இதைக்கண்டேன். நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyagam.com/vote-button/

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !